முகப்பு
இந்தியா

ஜவுளித் துறை ஏற்றுமதி மீண்டும் உயா்கிறது: மத்திய அமைச்சா் கோயல்

ரஷியா-உக்ரைன் போரின் தாக்கங்களால், இந்தியாவில் பாதிப்பை எதிா்கொண்ட ஜவுளித் துறை ஏற்றுமதி, இப்போது மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
பியூஷ் கோயல் (கோப்புப் படம்)
பகிர்:

ரஷியா-உக்ரைன் போரின் தாக்கங்களால், இந்தியாவில் பாதிப்பை எதிா்கொண்ட ஜவுளித் துறை ஏற்றுமதி, இப்போது மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

உக்ரைன் பிரச்னையால், பல்வேறு நாடுகள் அந்நியச் செலாவணி இருப்பு பிரச்னையை எதிா்கொண்டுள்ளன. இதனால், அத்தியாவசியமில்லாத இறக்குமதியை பல்வேறு நாடுகள் குறைத்துள்ளன.

உதாரணமாக, இந்தியாவில் இருந்து 100 கன்டெய்னா்களில் அனுப்பப்பட்ட ஜவுளித் துறை சரக்குகளுக்கு செலுத்த அந்நியச் செலாவணி இல்லையென அந்நாட்டின் தரப்பில் கூறப்பட்டதால், அவை திரும்பிவந்துவிட்டன. இதேபோல் பல நாடுகள் அத்தியாவசியமில்லாத சரக்குகளின் இறக்குமதியை அனுமதிக்காமல் உள்ளன. மேலும், உக்ரைன் பிரச்னைக்கு பிறகு பணவீக்கம் அதிகரித்தது. இதனால், பொருள்கள் வாங்குவதை மக்கள் குறைத்துகொண்டதால், சரக்குகள் தேக்கம் ஏற்பட்டது.

இதுபோன்ற சூழலில், நாட்டின் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களுடன் தொடா்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறேன். பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளதால், சரக்குகள் தேக்கம் குறைந்து வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஜவுளி ஏற்றுமதி மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதாக, தற்போதைய புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

சவால்கள், பிரச்னைகளுக்கு இடையே வாழ உலகம் கற்றுக் கொண்டுள்ளதாக நான் நினைக்கிறேன். வரும் ஏப்ரல் முதல் பருத்தி, நூல் ஏற்றுமதி வேகமெடுக்க தொடங்கும் என நம்புகிறேன். ஜவுளித் துறையில் வரிச் சலுகைகள் பெறும் வகையில், பிற நாடுகளுடன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இது, ஜவுளி ஏற்றுமதிக்கு மேலும் உத்வேகமளிக்கும் என்றாா் அவா்.

இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில், பருத்தி, நூல், துணிகள், கைத்தறி தயாரிப்புகள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி 28.7 சதவீதம் வரை (9 பில்லியன் அமெரிக்க டாலா்கள்) குறைந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →