சவால்களை சமாளிக்கும் மனவலிமை கொண்டவர் விருச்சிக ராசியினர்!
விருச்சிக ராசியினரின் குணாதிசயங்கள் பற்றி..
விருச்சிக லக்கினம் / ராசியில் பிறந்தவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர். "விழுந்தாலும் எழுந்து ஓடுவேன்" என்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கையே இவர்களின் மிகப்பெரிய பலம். இயல்பாகவே தாய்மையுடன் கூடிய சகிப்புத்தன்மை இவர்களிடம் இருக்கும். ஒருவர் செய்யும் செயல் சரியா தவறா என்பதைப் பொருட்படுத்தாமல், தங்கள் மனதில் இருப்பதை நேர்மையாகவும் தைரியமாகவும் வெளிப்படுத்தும் குணம்.
தங்களை ஒரு குருவாக எண்ணி, பிறரை வழிநடத்தும் திறன் கொண்டவர்கள். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்து, எவராலும் எளிதில் குறைகூற முடியாதவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் தேவைகளைப் புரிந்து அவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்யும் தன்னார்வலராக இருப்பார்கள். நல்ல எண்ணம் இருப்பவர்களிடம் மட்டுமே நட்புக் கொள்வார்கள். அதனால் இவர்களை எளிதில் நண்பராக்க முடியாது. மனதில் பட்டதை உடனே செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். விருச்சிக லக்கினத்தினர் தங்கள் பிறந்த இடத்தை விட்டு வெளியே சென்று தனக்கென ஒரு கோட்டையை அமைத்து ஆளும் தன்மை கொண்டவர்கள். முக்கியமாக குருவின் ஆசிர்வாதம் பெற்றவர்களாக இருந்தால் அவர்களிடம் சாபம் பெறாமல் இருப்பது நன்று. வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் "நான் விழ மாட்டேன்" என்ற மனவலிமை கொண்டவர்கள்.
விருச்சிகம் ராசியின் சின்னம் தேள். தேள் வெளியில் அமைதியாகத் தோன்றினாலும், அது தன்னைத் தற்காத்துக்கொள்ளும்போது பிறரைக் கொட்டும், அதுபோலவே இவர்களின் குணமும் இருக்கும். விருச்சிக ராசிக்காரர்களும் வெளிப்படையாக அன்பாகவும் அமைதியாகவும் நடந்து கொள்வார்கள். ஆனால். மனதில் இருப்பதை ஒருநாள் வெளியில் கொட்டிவிடுவார்கள். அதுவே சில சமயம் அவர்களின் பலமாகவும் பலவீனமாகவும் மாறும். ஒருவரை நம்பினால் முழுமையாக நம்புவார்கள். ஆனால் ஏமாற்றம் ஏற்பட்டால் அதை மறக்கமாட்டார்கள். தேள் கொட்டும் இயல்புபோல, தேவையான தருணத்தில் தங்களின் கடுமையான வார்த்தைகளைக் கொண்டு கொட்டும் தன்மை கொண்டவர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் ஆழமான மனம் கொண்டவர்கள். அவர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. அமைதியாக இருப்பார்கள் ஆனால் சீற்றம் கடுமையாக இருக்கும். நம்பிக்கையில் உண்மையுடன் இருப்பார்கள்; பொய் இருந்தால் உறவு உடையும்.
முக்கிய குணாதிசயங்கள்
சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தைரியம், விசுவாசமானவர், சில நேரங்களில் வேகம் கலந்த முரட்டுத்தன்மை, ஆன்மிக வழிபாட்டிலும் உற்சாகம், தொழிலில் கற்கும் ஆர்வம், உறுதி, துணிவு, உடையில் எளிமை, உடன் பிறந்தவர்கள் மீது ஆழமான உணர்வு, பொருள் மீது பற்று, மற்றவர்கள் மனதைப் புரிந்துகொள்ளும் திறன், அடிபணியாத குணம், ஆழ்ந்த சிந்தனை, நம்பிக்கைக்குரியவர் வைராக்கியம், தீவிரமான காதல் மற்றும் வேலையை முழுமையாக முடிக்கும் ஒழுக்கம், ஆன்மிக ஈர்ப்பு மற்றும் பிரபஞ்ச ரகசியங்களை உணரும் ஆற்றல் கொண்டவர். இந்த ராசிக்காரர்கள் கோபம், சந்தேகம், ஆழமான உணர்ச்சி கொண்டவர்கள். துரோகத்தை மன்னிக்க மாட்டார்கள்; மனதில் இருப்பதை நேராகப் பேசுவார்கள். உண்மையான சொந்தங்களை மிகவும் பாசமாகப் பார்த்துக்கொள்வார்கள், ஆனால் அந்த ஆழமான பாசமும் உணர்ச்சியும் சில நேரங்களில் அவர்களுக்கே பலவீனமாகவும் மன அழுத்தமாகவும் மாறலாம்.
விருச்சிகத்தில் புதன் மற்றும் சனி புதன் அதிக அளவு நன்மைகளைத் தராது. குருவின் நட்சத்திரம் விசாகம்-4, பெரியவா பிறந்த நட்சத்திரம் மற்றும் சனியின் நட்சத்திரமான அனுஷம், சந்திரனின் கர்ம பதிவு மற்றும் புதனின் நட்சத்திரமுமான கேட்டை இந்த விருச்சிக வீட்டில் அமர்ந்துள்ளனர். எண்ணற்ற குருமார்கள் விருச்சிகத்தோடு தொடர்புகளைக் கொண்டவர்கள். இந்த லக்கினத்தில் குருவின் தாக்கம் அதிகம் உள்ளதால், இந்த லக்னத்தினர் குருவாக இருந்து மற்றவர்களை வழி நடத்துவார்கள். முக்கியமாக இவர்கள் அதிக கடவுளின் வரலாறுகளும் ஸ்லோகங்களும் கற்றுத் தெரிந்தவராக இருப்பார்கள்.
விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் என்பவர் பாக்கியத்தைக் கொடுப்பவர். ஆனால் அவர் இந்த வீட்டில் நீச்சம் பெறுகிறார். இவருக்கு தன்னுடைய இளமைப் பருவத்தில் கிடைக்க வேண்டிய பாக்கியங்களைக் குறைத்துத் தருவார். எடுத்துக்காட்டாக இளமையிலே திருமணம் செய்து தாயின் பிரிவை ஏற்படுத்தும். விருச்சகத்தின் 9 ஆம் வீட்டில் இருக்கும் கிரகங்களைப் பொருத்து பாக்கியங்களை இவர்கள் தரப்படும். இளமையில் சுகம் குறைவு, அதோடு பாக்கியத்திற்குப் போராடிக் காத்திருக்கும் அன்னப்பறவை. மனதில் அதிகம் ரகசியங்களை மறைத்து வைத்திருக்க மாட்டார்கள். அவ்வப்போது ஆண்களாக இருந்தால் பெண்களாலும், பெண்களாக இருந்தால் ஆண்களாலும் தொந்தரவு ஏற்படும்.
அதே போல் நீர் தன்மை கொண்ட ராசி மற்றும் நெருப்பு கிரகம் செவ்வாய் ஆட்சி. மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பங்களை எளிதில் இவர்களால் நிவர்த்தி செய்ய வழி தெரியும். முடிந்தவரைப் பிடித்த உணவு என்றால் வெள்ளை நிற உணவுகள் முக்கியமாக தயிர்ச் சாதம் மற்றும் நீர் ஆகாரங்களை விரும்பி உண்ணுவார்கள். மேஷ செவ்வாயை விட விருச்சிக செவ்வாய் மிகவும் சாது. ஆனாலும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற தத்துவத்தை வெளிப்படுத்தி விடுவார்கள். இந்த வீடு கால புருஷ தத்துவப்படி அஷ்டமத்தை (8) குறிக்கும். எட்டாம் பாவம் என்பது நோயின் வீரியத்தையும், திடீர் அதிர்ஷ்டத்தையும் குறிக்கும் முக்கிய பாவம்.
இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பணவரவு சில நேரங்களில் கிட்டும். இவர்களுக்கு வயிறு பகுதியில் உள்ள இனப்பெருக்க / மர்ம உறுப்புகள், ஜீரண பகுதி மற்றும் சிறுநீரகத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அதுதவிர தைராய்டு சுரபி, சமரு நோய், ரத்த சோகை, குடல் இறக்கம், ரத்த அணு குறைபாடுகள் ஏற்படுத்தும். சனியின் தாக்கம் ஏற்படும்பொழுது கால் வலி, காலில் புண் / சிராய்ப்புகள் ஏற்படும். இதுதவிர மன அழுத்த சம்பந்தமான நோய்களின் தாக்கம் இருக்கும்.
விருச்சிக லக்னத்துக்கு பத்துக்குரியவன் சூரியன் நல்ல நட்பு நிலையில் இருப்பவர். பத்து என்பது தொழிலையும் கர்மாவையும் குறிக்கும் இடம். அதனால் இவர்கள் மருத்துவத் துறை, சமையல் கலை, உணவு தொடர்பான துறைகள், அறிவியல் ஆராய்ச்சி, அரசு முனைவர், போலீஸ், ராணுவம், ஆய்வகம், ஆன்மிக ஜோதிடம், உளவியல் மற்றும் அனைத்து விசாரணை துறைகளில் ஈடுபடுவார்கள். விருச்சிக ராசியில் 1, 10ம் அதிபதியும் அவற்றோடு சனி புதனோடு நல்ல தொடர்பில் இருந்தால் மேலே சொல்லப்பட்ட தொழில்களில் மேம்படுவார்கள். இவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவர்கள் வேலையிலிருந்து தானே விலகிக் கொள்வார்கள். தன்னுடைய கர்மாவை கழிக்க ஆன்மிகப் பயணத்தில் ஈடுபட்டு கடவுளைத் தேடுவார்கள்.
விருச்சிகத்தில் புதனும் நட்பு நிலையில் இல்லை. சிலசமயம் இவர்கள் படிப்பு தடைபெரும் நிலை ஏற்படும். அதனால் இவர்கள் புத்திசாலித்தனத்தை தன்னுடைய படிப்பில் அவ்வப்பொழுது கூர்மைப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு நல்ல நட்பு நிலையில் இருப்பார். இரண்டாம் பாவத்தில் குரு வலுத்து இருந்தால் பணவரவு, குடும்ப வளர்ச்சி, சேமிப்பு அதிகரிக்கும். 11ம் பாவத்தில் இருந்தால் லாபம், ஆசை நிறைவு, புதிய உறவுகள் கிடைக்கும். குரு வலுவாக இருந்தால் செழிப்பு; பலவீனமாக இருந்தால் தாமதம் மற்றும் ஏற்றத் தாழ்வு இருக்கும். புதனோடு குரு அல்லது ராகு நெருக்கமான பாகையில் சேரும்பொழுது பார்வை படும்போது தைராய்டு காரணியான தொண்டை வீக்கம் அல்லது கட்டி போன்று வெளியே தெரியும். ராகு கேது வலிமை பொறுத்து ஹைப்போ அல்லது ஹைப்பர் நிலை மாறுபடும்.
முக்கியமான ஹார்மோன் மற்றும் தைராய்டு சுரப்பி நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். இந்த சுரப்பி முக்கியமாகக் கருத்தரிக்க உதவும் ஊக்கி. அதற்கு ஏற்றார் போல மருத்துவ ஆலோசனை முன்பே கண்டறிந்து, அயோடின் சார்ந்த உணவு மற்றும் யோகா பயிற்சி மூலம் தீர்வைக் காண வேண்டும். ஏழாம் அதிபதி சுக்கிரன் அவரே இவருக்கு விராயாதிபதி. இவருக்கு அமையும் களத்திரம் அதிக ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர் மற்றும் கொஞ்சம் செலவாளியாக இருப்பார். அதனால் இவருக்குக் களத்திரத்தால் விரயம் ஏற்படும். சிலருக்குத் திருமணம் என்பது சீக்கிரத்தில் நடைபெற்று விடும். இங்குச் சனி பகவான் பகை கிரகமாக இருப்பதால் வாழ்க்கையில் தடைகள், தாமதங்கள் அதிகமாக இருக்கும்.
அவர்களுக்கு சனி அதிக முயற்சி, கடின உழைப்பு மற்றும் வேலைப்பளுவைக் கொடுப்பார். ஆனால் அந்த உழைப்பின் பலன் உடனே கிடைக்காது.
வயது முதிர்ந்த பின் நிலையான வெற்றியும் மரியாதையும் கிடைக்கும். விருச்சிகம் ஒரு சக்திவாய்ந்த ராசி. இவர்கள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டால், மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும்.
பரிகாரம்
இந்த ராசியினர் செவ்வாய், வியாழக்கிழமைகளில் பத்மாவதி தாயார், வல்லக்கோட்டை முருகர், குருமார்கள், சந்திரமௌலீஸ்வரர் மற்றும் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்த பெரியவரை வணங்கி தரிசிக்க வேண்டும்.
தொலைபேசி: 8939115647
vaideeshwra2013@gmail.com