மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!
மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு குறித்து அறிவுறுத்தும் மருத்துவர்கள் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனமாக இருக்குமாறு கூறுகிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான இரண்டு பேர் பலியான நிலையில், நாட்டில் அது குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது.
நமக்கெல்லாம் வராது, தமிழ்நாட்டுக்கு வராது என்றெல்லாம் புறந்தள்ளி விட முடியாது என்பதை, கடந்த கால வரலாறுகள் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றன.
2020 காலக்கட்டத்தைப் போல தற்போது பரவும் கரோனா தொற்று பெரும்பாலும் உயிர்பலியை ஏற்படுத்துவதில்லை என்றாலும், நுரையீரல் தொற்று, ஏற்கனவே உடல் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மருத்துவர்கள் கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
Advertisement
Advertisement
தற்போதைய தொற்று அதிகரிப்புக்கு முற்றிலும் புதியதொரு வைரஸ் காரணமல்ல; மாறாக, பல காரணிகள் இணைந்து செயல்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மேலும், ஒரு முக்கிய காரணமாக இருப்பது, கோவிட்-19 நோயை உண்டாக்கும் SARS-CoV-2 வைரஸின் இயல்பான பரிணாம வளர்ச்சியாகும். வைரஸ்கள் மரபணு மாற்றங்கள் (mutations) மூலம் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கின்றன. இதில், புதிய வகை வைரஸ்கள் முந்தைய வகைகளை விட எளிதாகப் பரவக்கூடியவை; இவை கடுமையான நோயை ஏற்படுத்தாவிட்டாலும், எளிதாக பரவுவதால் தொற்று பரவலை அதிகரிக்கச் செய்கின்றன.
சரி நம்மை பாதிக்காது, நாம்தான் தடுப்பூசி செலுத்தியிருக்கிறோமே என்று நினைத்தால் அதுவும் தவறாம். தடுப்பூசி மூலம் கிடைத்த பாதுகாப்பு காலப்போக்கில் படிப்படியாகக் குறையும் என்றும் கூறுகிறார்கள். தடுப்பூசி ஒட்டுமொத்தமாக செயல்படாது என்பதல்ல, தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாக குறையும் என்பதே அர்த்தம்.
கடந்த காலங்களைப் போலவே, நெரிசலான உட்புற அரங்குகள், போதிய காற்றோட்டமின்மை, பயணங்கள், பெரிய கூட்டங்கள் போன்றவை வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, சார்ஸ் கோவிட் வைரஸ் உலகளவில் தொடர்ந்து பரவிக்கொண்டேதான் இருக்கிறது. இணை நோய் உள்ளவர்களுக்கு இது அச்சுறுத்தலாகவே இருப்பதாகவும், சுகாதாரத் துறைகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.
வழக்கம்போலத்தான் அறிகுறிகள்
கரோனா அறிகுறிகள் வழக்கம் போலவே, சாதாரண சளியுடன் தொடங்கலாம். காலையில் எழுந்ததும் தொண்டை வலி. லேசான அசதி காணப்படும். சிலருக்கு காய்ச்சல் குறைவதில்லை. இதெல்லாம் காணப்பட்டால், சற்று மக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். பொது இடங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்குச் செல்லாமல் தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
வயதானவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
பரிசோதனை அவசியமா?
பொதுவாக லேசான பாதிப்பு ஒரு சில நாள்களில் குணமடைந்து விடும். ஆனால் அறிகுறிகள் அதிகரிப்பது, தீவிரமடைவதாக இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்து அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இது நிலைமை மோசமைடைவதிலிருந்து தடுக்கலாம்.
கைகளைக் கழுவுவோம்
நாம் பல காலமாக கரோனா வைரஸுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, அவ்வப்போது கைகளைக் கழுவும் பழக்கத்தை தொடர்ந்து பின் பற்ற வேண்டும். இரும்பினாலோ, தும்மினாலோ கைகளைக் கழுவ வேண்டும் என்பதே பொதுவான முன்னெச்சரிக்கையாகும்.
COVID-19 cases on the rise again Be alert if you have these symptoms
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.