எதிர்க்கட்சிகளை அழிப்பதே பாஜகவின் நோக்கம்: ஆம் ஆத்மி
மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டுவதே பாஜக தலைமையிலான மத்திய அரசின் எண்ணம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டுவதே பாஜக தலைமையிலான மத்திய அரசின் எண்ணம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
பத்திரிகையாளர்களை சந்தித்த ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா இதனை தெரிவித்தார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், சிபிஐ வேண்டுமென்ற வழக்குரைஞர் நீதிமன்றத்தில் ஆஜரவாதைத் தடுத்தது. அதன் விளைவாக வழக்கு அடுத்த தேதிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், அமலாக்கத் துறை சிசோடியாவை மீண்டும் கைது செய்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையே மீண்டும் கேட்கத் தயாரானது. இந்த செயல் சட்டவிதிமுறைகளை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதை வெளிக்காட்டுகிறது. வழக்கு நடைமுறையை விசாரணை அமைப்புகள் மீறி வருகின்றன.
இதையும் படிக்க: வாக்காளர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க புதிய வசதி அறிமுகம்: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிபிஐ பதிவு செய்த வழக்குகளில் 95 சதவிகித வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதானவை. அவற்றுள், 30 வழக்குகள் திரிணமூல் காங்கிரஸ் மீதும், 25 வழக்குகள் காங்கிரஸ் தலைவர்கள் மீதும், 4 வழக்குகள் ஆம் ஆத்மி தலைவர்கள் மீதும், தலா 10 வழக்குகள் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தள தலைவர்கள் மீதும் போடப்பட்டுள்ளன. மக்களாட்சியில் இருந்து இந்தியாவை அதிகாரத்தின் பிடியில் உள்ளவர்களின் கைகளுக்கு மாற்றுவதே பாஜகவின் இலக்கு. அவர்களது நோக்கம் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவதாகும்.
எதிர்க்கட்சிகளை அழித்துவிட்டு ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பதனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். பாஜக ஒரு சலவை இயந்திரம். எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜவில் இணைந்தால் அவர்கள் மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குகள் முடிவுக்கு வந்துவிடும். சிபிஐ சோதனையின்போது மணீஷ் சிசோடியா இல்லத்திலிருந்து எந்த ஒரு கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்படவில்லை.இருந்தும், அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், கர்நாடகத்தில் பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.ஆனால், அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.