முகப்பு
இந்தியா

தேசியவாத காங். தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் ராஜிநாமா!

தேசியவாத காங்கிரஸின் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் ராஜிநாமா செய்வதாக திடீரென்று இன்று அறிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:54 PM
பகிர்:

தேசியவாத காங்கிரஸின் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் ராஜிநாமா செய்வதாக திடீரென்று இன்று அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் 35 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பதவிகளை வகித்த சரத் பவார், கடந்த 1999-ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில், தனது சுயசரிதை புத்தகத்தின் இரண்டாவது பாகம் வெளியீட்டு விழாவின்போது பேசிய சரத் பவார், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று காலை தெரிவித்தார்.

இதுகுறித்து சரத் பவார் பேசியதாவது:

நான் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன். மாநிலங்களவை உறுப்பினர் பதவி இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. இனிமேல், நான் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். நான் எனது அரசியல் வாழ்க்கையை மே 1, 1960-ஆம் ஆண்டு தொடங்கினேன். நேற்று மே தினம் கொண்டாடினோம். இந்த நீண்ட அரசியல் வாழ்க்கையை எங்காவது நிறுத்துவது பற்றி யோசிக்க வேண்டும். ஒருவர் பேராசைக் கொள்ளக்கூடாது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க கட்சியின் மூத்த தலைவர்களை கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட்டு, அதில் முடிவெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இவரது அறிவிப்பை எதிர்பார்க்காத தொண்டர்களும், கட்சியின் நிர்வாகிகளும், முடிவை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தினர்.

சரத் பவாருக்கும், அஜித் பவாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சரத் பவார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், சரத் பவாரின் இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக நான்கு முறையும், மத்திய அமைச்சராக மூன்று முறையும் பதவி வகித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →