கேரளத்தில் பயங்கரம்: சிகிச்சை அளித்த பெண் மருத்துவரைக் குத்திக் கொன்ற கைதி
பெண் மருத்துவரை, கைதி ஒருவர் கத்திரிக்கோலால் குத்தியதில் இளம் பெண் மருத்துவர் வந்தனா தாஸ் பலியானார்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவரை, கைதி ஒருவர் கத்திரிக்கோலால் குத்தியதில் இளம் பெண் மருத்துவர் வந்தனா தாஸ் பலியானார்.
பலியான பெண் மருத்துவர் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 23 வயதே ஆன வந்தனா தாஸ் என்பதும், அவர் அறுவைசிகிச்சை மருத்துவராக பணியாற்றி வந்ததும்தெரிய வந்துள்ளது.
கொலை செய்த சந்தீப் (42), ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், அண்டை வீட்டாருடன் சண்டை ஏற்பட்டு அவர்களை தாக்கியதாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவரை காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அவருக்கு வந்தனா சிகிச்சை அளித்த போது அறுவைசிகிச்சை கத்திரிக்கோலை எடுத்த சந்தீப், அவரை பல முறைக் குத்தியதில் அவர் பலியானார். இந்த சம்பவத்தில், அவரை அழைத்து வந்த காவலர்கள் உள்பட ஐந்து பேர் கத்திக்குத்துக் காயத்துக்கு உள்ளாகினர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், மாநில மருத்துவர்கள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
போதை பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சந்தீப் என்பவரை சிகிச்சைக்காக கொட்டாரக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காவல்துறையினர் அழைத்து வந்த போது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.