ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.
அமிருதசரஸில் இருந்து கட்ரா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்த போது, ஜஜ்ஜர் கோட்லி என்ற இடத்தில் சாலையோரம் இருந்த மிகப்பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில், 8 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
உள்ளூர் மக்களுடன் துணை ராணுவப் படையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேருந்தைத் தூக்கி, அதற்குக் கீழே யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று சோதிக்க கிரேன் வரவழைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.