புத்தக வெளியீட்டிற்கு முன்பாகவே தனது சுயசரிதையைத் திரும்பப் பெறுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோமநாத் அறிவித்துள்ளார்.
சோமநாத் எழுதிய ‘நிலவு குடிச்ச சிம்மங்கள் (நிலவொளியைக் குடித்த சிங்கங்கள்) என்ற தன்வரலாற்று நூலை ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அந்த புத்தகத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவனுக்கு எதிரான சில கருத்துகள் இடம்பெற்றிருந்ததாகவும், சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி இருந்ததாகக் கூறப்படுகிறது.
“தேவையற்ற சர்ச்சைகளை எழுப்புவது இந்தப் புத்தகத்தின் நோக்கமல்ல, எனவே இந்த புத்தக வெளியீட்டினை ரத்து செய்து, புத்தகத்தை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக” இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறினார்.
இருப்பினும், இதுதொடர்பாக மத்திய அமைச்சகத்திடம் இருந்து எந்தவொரு உத்தரவும் வரவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இதையும் படிக்க: 60 மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல்: பள்ளி முதல்வர் கைது!
விண்வெளி நிறுவனத்தில் அவரது வாழ்க்கையை ஆழமாக ஆராயும் விதத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் சோமநாத் தனக்கு முந்தையவருக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரோ தலைவர் பதவி உட்பட பல முக்கியமான பொறுப்புகளை சோமநாத் அடைவதைத் தடுக்க, அவருக்கு முன்னாள் இஸ்ரோ தலைவராக இருந்த சிவன் முயற்சித்திருக்கலாம் என்று புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.