முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளையொட்டி, புதுதில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் இன்று (நவம்.19) மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது, “இந்திரா காந்தி மிகத் திறமையான நிர்வாகி, நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர். இந்தியாவின் முதல் பெண் பிரதமரான அவர் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். அவரது பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஷமியால் ஆனது: இறுதிப் போட்டியில் என்ன செய்யப் போகிறார்?
அதே போல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய மக்களின் தலைவர் இந்திரா காந்தி. நாட்டுக்கான அர்ப்பணிப்பு குறித்து அவர் கற்றுத்தந்த பாடங்களே எனது ஒவ்வொரு அடியையும் வலுப்படுத்தி வருகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
1917 நவம்பர் 19-ஆம் நாள் பிறந்த இந்திரா காந்தி 1966 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமரானார். இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இவரே ஆவார். 1966 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலும், பின்பு 1980 முதல் 1984 ஆம் ஆண்டு வரையிலும் பிரதமர் பதவி வகித்துள்ளார். ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு அதிக காலம் பிரதமர் பதவி வகித்தவர் இந்திரா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.