செய்யறிவு தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்: ராஜீவ் சந்திரசேகர் உறுதி
செய்யறிவு தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய இணையமைச்சர் உறுதியளித்தார்.
செய்யறிவு தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக விரைவில் முக்கிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று (நவம்.21) தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “இணையம், செய்யறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அதே சமயத்தில் அவை தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. முன்னதாக, வெள்ளிக்கிழமை நடந்த தீபாவளி மிலன் நிகழ்வில் பிரதமர் மோடி இந்த விஷயத்தை சரியாக அடையாளப்படுத்தி பேசினார்.
செய்யறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் டீப்-ஃபேக் போன்ற செயலிகள் இணையத்தை பயன்படுத்தும் இந்தியர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
Advertisement
Advertisement
இணையத்தை பயன்படுத்தும் 120 கோடி இந்தியர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் டீப் ஃபேக் போன்ற தொழில்நுட்பங்கள், போலித் தகவல்கள் பரவுதல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, விரைவில் புதிய சட்டம் உருவாக்கப்படும்” என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதியளித்தார்.
இதையும் படிக்க: ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களை ஆதரிக்காதவர் பிரதமர் மோடி: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் தாக்கு
இந்தியர்களுக்கு இணைய பயன்பாட்டை நம்பிக்கையானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.
அந்தவகையில், இணைய பயன்பாட்டை மிகுந்த பாதுகாப்பாக்கும் வகையில் சட்டவிதிமுறைகளை உருவாக்கி வருகிறோம். அதுகுறித்து தெரிந்துகொள்ள நவம்பர் 24-ஆம் தேதி வரை காத்திருங்கள் என்று மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேசினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொலி வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து செய்யறிவைப் பயன்படுத்தி போலி விடியோ உருவாக்குவதை தடுப்பது குறித்து நாடு முழுவதும் விவாதம் கிளம்பியது.