ஜம்மு மோதலில் பலியான ராணுவ அதிகாரிக்கு இறுதி மரியாதை
பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் உயிரிழந்த ராணுவ அதிகாரிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
ஜம்மு- காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய அதிகாரி கேப்டன் எம்.வி.பிரஞ்சலின் உடலுக்கு பொதுமக்கள் பெருமளவில் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு வெள்ளிகிழமை இரவு கொண்டு வரப்பட்ட அவரது உடல் இறுதி சடங்குகளுக்காக அனேகல் தாலுகாவில் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
29 வயதான எம்.வி. பிரஞ்சல் இந்திய ராணுவத்தின் 63-வது ராஷ்ட்டிரிய துப்பாக்கி அணியில் அதிகாரியாக பணியாற்றினார். கடந்த புதன்கிழமை ரஜெளரியில் நடந்த லக்ஷர் பயங்கரவாதிகளுடனான மோதலில் வீரமரணம் அடைந்தார்.
அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா மற்றும் பெங்களூர் புறநகர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.சுரேஷ் உள்ளிட்டோர் அதிகாரிக்கு அஞ்சலி செலுத்தினர்.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமய்யா அதிகாரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
மேலும், ராணுவ அதிகாரியின் குடும்பத்துக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாயை அரசு வழங்கும் என அறிவித்தார்.
இதையும் படிக்க: ஜம்மு: லஷ்கா் பயங்கரவாதி உள்பட 2 போ் சுட்டுக்கொலை
பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு அதிகாரியின் உடல் ராணுவ மரியாதையோடு அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டுள்ளது.