மணிப்பூரில் மொபைல் இணையதள சேவைகள் மேலும் 5 நாள்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மைதேயி - குக்கி சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதனால் அங்கு கடந்த சில மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், போராட்டத்தை மேலும் பெரிதாக்காமல் கட்டுப்படுத்தும் நோக்கத்திலும் மொபைல் இணையதள சேவை மட்டும் தற்போது முடக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மொபைல் இணைய சேவை முடக்கம் மேலும் 5 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பகுதிகளில் இன்னும் அமைதி சூழ்நிலை ஏற்படாததால் வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி வரை மொபைல் போனில் இணைய சேவை பயன்படுத்தத் தடை நீட்டிக்கப்படுவதாக மணிப்பூர் டிஜிபி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் 9 நாள்களுக்குப் பிறகு நேற்று(வெள்ளிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.