அரசியலைத்தவிர தனது அனைத்து வணிகங்களும் நஷ்டத்தில் மூடப்பட்டுவிட்டதாக குஜராத் பாஜக எம்.பி. பாரத்சிங் தாபி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள ஹேமசந்திராச்சார்யா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 'பல அமைச்சர்கள், தலைவர்கள், தொழிலதிபர்கள் முன்னிலையில், 26 தொழில்களைத் தொடங்கினேன். ஆனால், அரசியல் வியாபாரத்தைத் தவிர அனைத்து வணிகங்களிலும் நஷ்டம் ஏற்பட்டதால் அவை அனைத்தையும் மூட வேண்டியதாயிற்று. அரசியல் வியாபாரம் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.
20 தொழில்களையும் நான் முயற்சி செய்துவிட்டேன். அனைத்தும் முடிந்துவிட்டது. அரசியல் மட்டுமே நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. சர்பான்ச் கிராமத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது. எனக்கு இப்போது எந்த பிரச்னையும் இல்லை. நீங்கள் வியாபாரம் செய்ய விரும்பினால் உங்கள் நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் என்னுடையதைப் போல ஆகிவிடும்' என்று பேசியுள்ளார்.
குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி, 'பல ஆண்டுகளாக பாஜகவுக்கு அரசியல்தான் வியாபாரமாக இருந்து வருவதால் அவருக்கு மட்டுமல்ல அனைத்து பாஜக எம்.பி.க்களும் அரசியல்தான் வியாபாரம்.
சர்பாஞ்ச் முதல் நாடாளுமன்றம் வரை தனது தொழில் நன்றாக இருப்பதாக பாரத்சிங் தாபி கூறினாலும், சம்பாதிப்பதில் அவர் மற்ற பாஜக தலைவர்களை விட மிகவும் பின்தங்கியுள்ளார்.
பாஜக அரசியலை தனது தொழிலாக மாற்றியுள்ளது. இதுதான் பாஜகவின் வணிக மாதிரி. அதன் தலைவர்களில் ஒருவரே தற்போது அதனை பொது இடத்தில் கூறியுள்ளார். காவி கட்சி அரசியலை வணிகமாக மாற்றி நாட்டின் ஜனநாயகத்தை அழித்து வருகிறது' என்று விமரிசித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.