முகப்பு
இந்தியா

தில்லி 'நியூஸ் கிளிக்' ஊடக நிறுவனத்தில் சிபிஐ சோதனை!

தில்லியில் தனியார் ஊடக நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:07 AM
பகிர்:

தில்லியில் தனியார் ஊடக நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றதாகக் கூறி தில்லியில் இணையதள செய்தி நிறுவனமான நியூஸ் கிளிக் அலுவலகத்தில் தில்லி காவல்துறையினர் கடந்த அக். 3 ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர்.

அலுவலகம் மட்டுமின்றி, அதில் பணிபுரியும் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் தில்லி, நொய்டா, காசியாபாத் பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இதில் ஊழியர்களின் லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

அன்றைய தினம் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவரின் மகன் 'நியூஸ் கிளிக்' ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதுடன் யெச்சூரியின் வீட்டில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதன் தொடர்ச்சியாக ஊடக நிறுவனர் பிரபீர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பணம் பெற்றதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ, இன்று நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டு வருகிறது. 

ஊடக நிறுவனர் பிரபீர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.