பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி: மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நரேந்திரே மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுதில்லி: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நரேந்திரே மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளின் உயரம் தாண்டும் ஆட்டத்தில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பிரதமர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளின் ஆண்கள் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது அவரது திறமைக்கும் உறுதிக்கு ஒரு சான்றாகும். இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதே உயரம் தாண்டும் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய வீரர் சைலேஷ் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்கள் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் அவரது செயல்திறன் அசாதாரணமானது. அவரது உறுதியும், கடின உழைப்பும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.