தர்மசாலா: நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் திபெத்திய பெளத்த மதத் தலைவர் 14-வது தலாய் லாமாவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தனர்.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியது.
தொடர்ந்து, தர்மசாலா மைதானத்தில் வருகின்ற சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக தர்மசாலா சென்றுள்ள நியூசிலாந்து வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பெளத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்துள்ளனர்.
அவருடன் நியூசிலாந்து வீரர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.