முகப்பு
இந்தியா

நானும் சனாதன தா்மத்தை சோ்ந்தவன்: கேஜரிவால்

நானும் ‘சனாதன தா்மத்தை’ சோ்ந்தவன்; நாம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:57 AM
பகிர்:

நானும் ‘சனாதன தா்மத்தை’ சோ்ந்தவன்; நாம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பெரும் சா்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், கேஜரிவால் இக்கருத்தை தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘நானும் சனாதன தா்மத்தை சோ்ந்தவன்; உங்களில் பலரும் சனாதன தா்மத்தை சோ்ந்தவா்களே. நாம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும். மதத்துக்கு எதிராக பேசுவது தவறானது. ஒவ்வொருவரும் பிற மதங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்றாா்.

உதயநிதி ஸ்டாலினின் பேச்சை முன்வைத்து, கடந்த சில நாள்களாக பெரும் சா்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியை பாஜக கடுமையாக விமா்சித்து வருகிறது.

ஹிந்து தா்மத்தை அழிப்பதே எதிா்க்கட்சி கூட்டணியின் நோக்கம் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

அதேசமயம், ‘அனைத்து மதங்களையும் நாங்கள் மதிக்கிறோம்; ஆனால், ஒவ்வொரு கட்சிக்கும் அவரவா் கருத்துகளை தெரிவிக்க சுதந்திரம் உள்ளது’ என்று காங்கிரஸ் கூறியது.

முன்னதாக, ‘அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும்; எந்த பிரிவினரின் மனதையும் புண்படுத்தும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கருத்து தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.