முகப்பு
இந்தியா

வெறுப்பு மறையும் வரை எனது நடைப்பயணம் தொடரும்: ராகுல் காந்தி

வெறுப்பு மறையும் வரை, இந்தியா ஒன்று சேரும் வரை தன்னுடைய நடைப்பயணம் தொடரும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். 

Updated On : 7 செப்டம்பர், 2023 at 5:53 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:42 PM

வெறுப்பு மறையும் வரை, இந்தியா ஒன்று சேரும் வரை தன்னுடைய நடைப்பயணம் தொடரும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி  கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கினார். பல்வேறு மாநிலங்களில் பல பகுதிகளுக்குச் சென்று மக்களுடன் உரையாடிய அவர், கடந்த ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைப்பயணத்தை நிறைவு செய்தார். 

அதன்பின்னரும் தான் செல்லாத பகுதிகளுக்குச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டு வருகிறார். அவரது நடைப்பயணம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஒற்றுமை நடைப்பயணத்தின் ஓராண்டு நிறைவையடுத்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஒற்றுமை மற்றும் அன்பை நோக்கிய கோடிக்கணக்கான அடிகள் அடங்கிய இந்த நடைப்பயணம், நாளைய நாட்டிற்கான சிறந்த அடித்தளமாக மாறியுள்ளது. வெறுப்பு மறையும் வரை, இந்தியா ஒன்று சேரும் வரை, இந்த பயணம் தொடரும். இது என் வாக்குறுதி' என்று பதிவிட்டு ஒரு விடியோவையும் வெளியிட்டுள்ளார். 

முன்னதாக, ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் வெறும் உடல் முயற்சி மட்டுமல்ல, உடைந்த மனசாட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நேர்மையான முயற்சி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

ராகுலின் ஒற்றுமை நடைப்பயணத்தின் ஓராண்டு நிறைவையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் இன்று பல்வேறு பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.