புது தில்லி: மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று தொடங்கிய மக்களவைக் கூட்டத்தில் முதல் அலுவலாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மசோதாவை தாக்கல் செய்து பேசிய அர்ஜூன்ராம் மெஹ்வால், மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும். பெரும்பாலான கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது கொண்டுவரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மக்களவையின் மூன்று பதவிக்காலங்களுக்குப் பொருந்தும் என்று தெரிவித்தார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது நாளை விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென கட்சிகள் வலியுறுத்தியிருந்த நிலையில், இன்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் அமா்வு நிறைவடைந்த பின்னா் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
பிரதமா் மோடி தலைமையில் 90 நிமிஷங்களுக்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி, எஸ்.ஜெய்சங்கா், நிா்மலா சீதாராமன், தா்மேந்திர பிரதான், நிதின் கட்கரி, அா்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பார்க்க:
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படும் சில முக்கிய மசோதாக்களுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை மற்றும் நீர்சக்தி துறை இணையமைச்சா் பிரகலாத் படேல், எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.