ஜார்க்கண்டில் விரைவு ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தி பயணிகளிடம் மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் கோட்டத்திற்கு உட்பட்ட லதேஹர் மற்றும் பர்வாதிஹ் ரயில்வே நிலையங்களுக்கு இடையே சனிக்கிழமை நள்ளிரவு சம்பல்பூர்-ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தி பயணிகளிடம் மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். லதேஹர் நிலையத்தில் ரயிலில் ஏறிய சுமார் 10-12 கொள்ளையர்கள், சிபதோஹர் நிலையம் அருகே வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பயணிகளை அச்சுறுத்தியதாக பயணி ஒருவர் கூறினார்.
பல பயணிகள் கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இதுகுறித்து தன்பாத் கிளையின் மேலாளர் அம்ரேஷ் குமார் கூறியதாவது, எஸ் 9 பெட்டியில் இந்த சம்பவம் நடந்தது. ஏழு பயணிகளுக்கு சிறிய காயம் ஏற்பட்டது, 13 பயணிகளின் ரூ. 75,800 மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஏற்கெனவே வகுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் எட்டு மொபைல் போன்களும் கொள்ளையடிக்கப்பட்டன. எங்கள் தொழில்நுட்பக் குழு அவர்களின் இருப்பிடங்களைக் கண்டுபிடித்து வருகிறது.
ரயில் தல்டன்கஞ்ச் நிலையத்தை அடைந்தபோது பயணிகள் கூச்சலிட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அங்கு ரயில் நிறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே நேற்று இரவு ரயில்நிலையம் விரைந்த தல்டன்கஞ்ச் துணைப் பிரிவு மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் ஷா, காயமடைந்தவர்கள் மெதினிராய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.