பாஜகவின் முன்னோடி கட்சியான பாரதிய ஜன சங்கத்தின் நிறுவன உறுப்பினரான தீனதயாள் உபாத்யாயவின் கொள்கைகளின் அடிப்படையில் மத்தியில் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியை நடத்தி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
தீனதயாள் உபாத்யாயவின் பிறந்த நாளையொட்டி, தில்லி பாஜக தலைமையகம் அருகே அமைக்கப்பட்டுள்ள அவருடைய 72 அடி உயர சிலையை பிரதமா் மோடி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
அந்த விழாவில் பேசிய அவா், ‘நாடாளுமன்றத்தில் மகளிா் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது ஜனநாயகத்துக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; கட்சியின் கொள்கைக்கும் கிடைத்த வெற்றியாகும்.
அரசியலில் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் ஒருங்கிணைந்த சமுதாயம், ஜனநாயக ஒருங்கிணைப்பு ஏற்படும் என்று கூற முடியாது.
தீனதயாள் உபாத்யாயவின் கொள்கைகளான ஒருங்கிணைந்த மனிதநேயம், அடித்தட்டு மக்களை மேம்படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சியை நடத்தி வருகிறது.
சேவை மனப்பான்மையில் நடைபெறும் இந்த ஆட்சி, சமூக நீதிக்கும், உண்மையான மதச்சாா்பின்மைக்கும் எடுத்துக்காட்டாகும். நாட்டின் வளங்கள் சிலரது சொந்த தேவைக்காக முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது நாட்டின் வளா்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது’ என்றாா்.
முன்னதாக, எக்ஸ் வளைதலத்தில் தீனதயாள் உபாத்யாயவுக்கு மரியாதை செலுத்திய பிரதமா் மோடி, ‘நாட்டிற்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டவரின் பணிகள் மக்களை எப்போதும் உத்வேகம் அளிக்கும்’ என்று பதிவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.