முரசொலி கட்டடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்த கருத்துக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை அவதூறு வழக்கு தொடர்ந்தது. இதை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததற்கு எதிரான எல்.முருகனின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க முரசொலி அறக்கட்டளைக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்த போது தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எல்.முருகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் எல்.முருகன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் பி.ஆர். கவாய், எம்.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் எல்.
முருகன் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் தவே ஆஜராகி, "அரசியல் உள்நோக்கத்துடன் இப்புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை தொடர்பாக மனுதாரர் தெரிவித்த கருத்துக்காக எப்படி அவதூறு வழக்குப் பதிவு செய்ய முடியும்? ஒரு விவகாரம் தொடர்பாக தனது கருத்தை வெளிப்படுத்த அரசியலமைப்புச்சட்டத்தின் பிரிவு 19 (கருத்து சுதந்திரம்) கீழ் மனுதாரருக்கு உரிமை உள்ளது' என்று வாதிட்டார்.
இது தொடர்பாக முரசொலி அறக்கட்டளை 6 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இது தொடர்பான குற்ற அவதூறு வழக்கு விசாரணைக்கு, அடுத்த விசாரணை தேதி வரை இடைக்கால தடை விதித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.