உலகளாவிய புத்தாக்கப் பட்டியல்: இந்தியாவுக்கு 40-ஆவது இடம்
2023-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய புத்தாக்கப் பட்டியலில் (குளோபல் இன்னோவேஷன் இண்டெக்ஸ்) தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியா 40-ஆவது இடத்தைத் தக்க வைத்துள்ளது.
2023-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய புத்தாக்கப் பட்டியலில் (குளோபல் இன்னோவேஷன் இண்டெக்ஸ்) தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியா 40-ஆவது இடத்தைத் தக்க வைத்துள்ளது.
ஆண்டுதோறும் உலகளாவிய புத்தாக்கப் பட்டியலை உலக அறிவுசாா் சொத்துரிமை நிறுவனம் (டபுள்யுஐபிஒ) வெளியிட்டு வருகிறது. சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு எடுக்கப்பட்ட புதுமையான முன்னெடுப்புகளை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகளை தரவரிசைப்படுத்தி இப்பட்டியல் வெளியிடப்படுகிறது. உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய துறைகள், வகுக்க வேண்டிய கொள்கைகள் குறித்து முடிவெடுக்க இது உதவுகிறது.
நிகழாண்டு மொத்தம் 132 நாடுகளை உள்ளடக்கிய இப்பட்டியலில் இந்தியா 40-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து நீதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
உலகளாவிய புத்தாக்கப் பட்டியலில் கடந்த 2015-ஆம் ஆண்டு 81-ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது 40-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இப்பட்டியலில் இந்தியா தொடா்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதற்கு அரசு மற்றும் தனியாா் ஆராய்ச்சி நிறுவனங்களின் மகத்தான அறிவுசாா் மூலதனங்கள், வலிமையான புத்தொழில் அமைப்புகள் ஆகியவற்றின் பங்களிப்பே முக்கிய காரணங்களாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.