விரைவில் இந்தியா கூட்டணியில் இணையவுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை, இந்தியா கூட்டணிக்கு ஆம்ஆத்மி கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இணைவது உறுதியாகியுள்ளது. இக்கூட்டணியில் இருந்து தனது கட்சி எப்போதும் விலகாது. கூட்டணியின் கொள்கையை நிறைவேற்ற உறுதியாக உள்ளதாக மேலும் கேஜரிவால் தெரிவித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுக்பால் சிங் கைரா கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக பஞ்சாப் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்த நிலையில், கூட்டணி குறித்து அரவிந்த் கேஜரிவால் கூறியிருப்பது முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த கேஜரிவால், சில நாள்களில் தொகுதிப் பங்கீடு தொடர்பான கொள்கைமுடிவு தயாராகி விடும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை ஏன் இன்னும் முன்னிறுத்தவில்லை என்ற கேள்விக்கு, "எங்கள் நோக்கம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிப்பது மற்றும் இந்த நாட்டில் உள்ள 140 கோடி மக்கள் அனைவரும் தாங்கள் பிரதமராக இருப்பதைப் போல உணரும் அமைப்பை உருவாக்குவது.
இதையும் படிக்க: பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்!
மக்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். எந்தவொரு தனிநபருக்கும் அதிகாரம் அளிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" எனத் தெரிவித்தார்.