முகப்பு
இந்தியா

எம்.பி.க்கள் இடைநீக்கம் ஜனநாயக விரோதம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

திமுக எம்.பி. கனிமொழி உள்பட 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Updated On : 14 டிசம்பர், 2023 at 5:21 PM
கோப்புப்படம்
பகிர்:

திமுக எம்.பி. கனிமொழி உள்பட 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "திமுக எம்.பி. கனிமொழி உள்பட 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோதமானது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உணர்வைக் குழிதோண்டிப் புதைக்கிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் சகிப்புத்தன்மையற்ற இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

Advertisement

எம்.பி.க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது என்பது நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறையா? ஜனநாயகக் கோயிலில் மிகப்பெரிய பாதுகாப்பு மீறலுக்கு பதில் தேடும் மக்கள் பிரதிநிதிகள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்? 

15 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நாடாளுமன்றம் விவாத மேடையாக இருக்க வேண்டுமே தவிர எதிர்கட்சிகளை வாயடைக்க வைக்கக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் இன்று ஒரேநாளில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மக்களவையில் 14 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் ஒருவர் என 15 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கு மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.