முகப்பு
இந்தியா

மக்களவை: அமித் ஷா பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் அமளி!

மக்களவைக்குள் நுழைந்து இருவர் புகைக் குப்பிகளை வீசிய விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:26 PM
பகிர்:

தில்லி: மக்களவைக்குள் நுழைந்து இருவர் புகைக் குப்பிகளை வீசிய விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மக்களவையில் புதன்கிழமை பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞா்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவா் தாக்குதல் நடத்தினா்.

இவா்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினா் கைது செய்து தில்லி போலீஸிடம் ஒப்படைந்தனா். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பல கட்ட சோதனைகளை கடந்து மக்களவைக்குள் புகைக் குப்பிகளை இருவர் கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை மக்களவை கூடியவுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

“மக்களவையில் நடந்த சம்பவத்திற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாம் அனைவரும் பார்வையாளர்களுக்கான பரிந்துரை கடித்தத்தை கவனமாக வழங்க வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.” என்று பேசினார்.

அவையில் இருந்த எதிர்க்கட்சி எம்பிக்கள், பாதுகாப்பு குறைபாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்று பதவி விலகக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மக்களவைக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு மக்களவை செயலகத்தின் கீழ் இருப்பதாக தெரிவித்த அவைத் தலைவர் ஓம் பிர்லா, பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

இதற்கிடையே, பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமாக இருந்த 8 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →