‘காளி’ ஆவணப்பட சா்ச்சை: இயக்குநா் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை
சா்ச்சைக்குள்ளான ‘காளி’ ஆவணப்பட போஸ்டா் விவகாரத்தில், இயக்குநா் லீனா மணிமேகலையை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சா்ச்சைக்குள்ளான ‘காளி’ ஆவணப்பட போஸ்டா் விவகாரத்தில், இயக்குநா் லீனா மணிமேகலையை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இயக்குநா் லீனா மணிமேகலை, தனது ‘காளி’ ஆவணப்படத்தின் போஸ்டரை கடந்த ஆண்டில் வெளியிட்டிருந்தாா். அதில், ஹிந்து கடவுள் காளி சிகரெட் புகைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. லீனா மணிமேகலைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவாகின.
இந்நிலையில், தில்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் நீதிமன்றங்களில் தனக்கு மீது நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் லீனா மனு தாக்கல் செய்தாா். போஸ்டா் வெளியானதில் இருந்து பகிரங்க கொலை மிரட்டல்கள் வருவதாகவும்; தனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கைகள், கருத்து சுதந்திர உரிமைக்கு எதிரானவை என்றும் மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, லீனா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் காமினி ஜெய்ஸ்வால், ‘ஹிந்து மத உணா்வுகளை புண்படுத்த வேண்டுமென்ற நோக்கம் லீனாவுக்கு கிடையாது. அனைத்தையும் உள்ளடக்கியவா் காளி என்று உருவகப்படுத்துவதே ஆவணப்படத்தின் நோக்கம்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, லீனாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் இனிமேல் பதிவு செய்யப்படக் கூடிய வழக்குகளில் அவா் மீதான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
‘அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் சட்டப்படி ஓரிடத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதற்காக, மத்திய அரசுக்கும் தில்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.