முகப்பு
இந்தியா

விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளது: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

சந்திரயான்-3 விண்கலம் நிலவை அடைய வாழ்த்துகளைத் தெரிவிப்போம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Updated On : 14 ஜூலை, 2023 at 6:21 PM
இஸ்ரோ தலைவர் சோம்நாத்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:33 PM


ஸ்ரீஹரிகோட்டா: அனைத்துக் கட்டங்களையும் வெற்றிகரமாகக் கடந்து, சந்திரயான்-3 விண்கலம் நிலவை அடைய வாழ்த்துகளைத் தெரிவிப்போம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில், சந்திரயான் - 3 விண்கலமானது நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து சரியாக பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Advertisement

சந்திரயான் விண்கலத்தைச் சுமந்துகொண்டுச் சென்ற எல்பிஎம் 3- எம்4 ராக்கெட்டின் இரண்டு அடுக்குகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பிரிந்த நிலையில், தற்போது மூன்றாவது அடுக்கும் வெற்றிகரமாக பிரிந்துவிட்டது.

பிறகு வெற்றிகரமாகப் பயணித்து பூமியிலிருந்து 179 கி.மீ. தொலைவில், நீள் வட்டப்பாதையில் சந்திரயான் - 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சந்திரயான் - 3 விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளது.

சந்திரயான் விண்கலமானது ஏவப்பட்ட 16 நிமிடங்களில் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நிலவிற்கான பயணத்தை சந்திரயான் தொடங்கியிருக்கிறது என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது குறித்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், பல்துறை தலைவர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.