மனைவி, உறவினரைக் கொன்று, காவல் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை
அமராவதி நகரின் உதவி காவல் ஆணையராக இருந்த பரத் கெய்க்வாட், தனது மனைவி மற்றும் உறவினரைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
புனே: அமராவதி நகரின் உதவி காவல் ஆணையராக இருந்த பரத் கெய்க்வாட், தனது மனைவி மற்றும் உறவினரைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
அமராவதி நகரின் பனேர் பகுதியில், பரத் கெய்க்வாட் இல்லத்தில், திங்கள்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பலியானவர்கள், காவல்துறை உதவி ஆணையராக இருந்த பரத் கெய்க்வாட் (57), அவரது மனைவி (44), உறவினரும் வழக்குரைஞராக பயிற்சி எடுத்த வந்தவருமான சித்தார்த் கெய்க்வாட் (36) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Advertisement
தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் நான்கு சுற்றுகள் சுட்டுள்ளார். மனைவியின் தலையிலும், உறவினரின் நெஞ்சுப் பகுதியிலும், வீட்டின் மேற் கூரையிலும் குண்டுகள் துளைத்துள்ளன.
கடைசியாக, தனது தலையில் துப்பாக்கியை வைத்து தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஜூலை 15ஆம் தேதி வரை பணியில் இருந்துவிட்டு, மூத்த அதிகாரியிடம் விடுமுறை கேட்டுக்கொண்டு வீடு திரும்பியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தின் போது வீட்டில் இருந்த உறவினர்கள் கூறுகையில், திங்கள்கிழமை இரவு கணவன் - மனைவி இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டதாகவும் அப்போது கைத்துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டபோது, அதனை அருகில் அறையில் உறங்கிக் கொண்டிருந்த உறவினர் தடுக்க ஓடி வந்த போது அவரது நெஞ்சிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாகவும், பிறகு கெய்க்வாட் தன்னையும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகிறார்கள்.