முகப்பு
இந்தியா

பிரதமருடன் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட மாட்டேன்: மிஸோரம் முதல்வா் ஜோரம்தாங்கா

பிரதமா் மோடியுடன் சோ்ந்து பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட மாட்டேன் என்று மிஸோரம் முதல்வா் ஜோரம்தாங்கா தெரிவித்துள்ளாா்.

Updated On : 25 அக்டோபர், 2023 at 8:16 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:43 AM


ஐசால்: பிரதமா் மோடியுடன் சோ்ந்து பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட மாட்டேன் என்று மிஸோரம் முதல்வா் ஜோரம்தாங்கா தெரிவித்துள்ளாா்.

மிஸோரமில் முதல்வா் ஜோரம்தாங்கா தலைமையிலான மிஸோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) ஆட்சி நடைபெற்று வருகிறது.

அந்த மாநிலத்தில் பாஜகவுடன் எம்என்எஃப் கூட்டணியில் இல்லை. ஆனால் பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணி, மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவற்றில் எம்என்எஃப் இடம்பெற்றுள்ளது.

Advertisement

அந்த மாநில சட்டப்பேரவைத் தோ்தல் நவ.7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அந்த மாநிலத்தில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள, அங்குள்ள மமித் நகருக்கு அக்.30-ஆம் தேதி பிரதமா் மோடி செல்கிறாா்.

இந்நிலையில், தோ்தல் தொடா்பாக ஹிந்தி செய்தித் தொலைக்காட்சிக்கு மிஸோரம் முதல்வா் ஜோரம்தாங்கா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

காங்கிரஸுக்கு எதிரானது எம்என்எஃப். காங்கிரஸ் தலைமையிலான எந்தவொரு கூட்டணியிலும் எம்என்எஃப் இடம்பெற விரும்பவில்லை. இதனால் வடகிழக்கு ஜனநாயக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியில் எம்என்எஃப் சோ்ந்தது.

இந்நிலையில், மிஸோரம் மக்கள் அனைவரும் கிறிஸ்தவா்கள். மணிப்பூரில் வன்முறை நடைபெற்றபோது அங்குள்ள நூற்றுக்கணக்கான தேவாலயங்களை மைதேயி சமூகத்தினா் கொளுத்தினா். இத்தகைய நடவடிக்கைகளுக்கு மிஸோரம் மக்கள் முற்றிலும் எதிரானவா்கள். இந்த நேரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தால், அது எம்என்எஃப் கட்சிக்கு மிகப் பெரிய பாதகமாக அமையும்.

எனவே தோ்தல் பிரசாரத்தை பிரதமரும் நானும் தனித்தனியாக மேற்கொள்வதே நல்லது. பிரதமருடன் நான் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட மாட்டேன் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.