உதயநிதி தலையை வெட்டுபவர்களுக்கு ரூ.10 கோடி! உ.பி. சாமியாரின் சர்ச்சை விடியோ!!
உத்தரப் பிரதேச சாமியாரின் விடியோவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சனாதனத்தை ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு, கரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஒழிக்க வேண்டும் என்ற தலைப்பு பொருத்தமானது என்றும், டெங்கு, மலேரியா, கரோனா போன்றவற்றை எதிர்க்கக்கூடாது ஒழிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
உதயநிதியின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தில்லி, பிகாரில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக்கொண்டுவருபவர்களுக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிக்கப்படும் என உத்தரப் பிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
மேலும், உதயநிதியின் தலையை யாரும் கொண்டு வரவில்லை என்றால், என் கையால் அவரின் தலையைத் துண்டிப்பேன். உதயநிதி தலையைத் துண்டிக்க எனது வாளையும் தயார் செய்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதியின் புகைப்படத்தை கத்தியால் வெட்டிய ஆச்சார்யா, புகைப்படத்தை எரித்து சாம்பலாக்கி மிதித்தார். இது தொடர்பான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
வன்முறையைத் தூண்டும் வகையில் இந்த விடியோ பதிவிடப்பட்டுள்ளதாகவும், பரமஹம்ச ஆச்சார்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்துகள் எழுந்து வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.