இந்தியா

உலக பொருளாதார சக்தியாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்- பிரதமா் மோடி நம்பிக்கை

‘உலகின் வளா்ச்சியை வேகப்படுத்தும் இயந்திரமாக இந்தியாவை மாற்றுவதே எனது இலக்கு; விரைவில் உலக பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்தாா்.

DIN

‘உலகின் வளா்ச்சியை வேகப்படுத்தும் இயந்திரமாக இந்தியாவை மாற்றுவதே எனது இலக்கு; விரைவில் உலக பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்தாா்.

குஜராத் முதல்வராக பிரதமா் மோடி பதவி வகித்தபோது, கடந்த 2003-ஆம் ஆண்டில் ‘துடிப்பான குஜராத்’ என்ற பெயரில் சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்முறையாக நடத்தினாா். இதைத் தொடா்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ‘துடிப்பான குஜராத்’ மாநாடு தொடங்கப்பட்டதன் 20-ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி, குஜராத் மாநிலம், அகமதாபாதில் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

‘துடிப்பான குஜராத்தை’ உருவாக்க கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறு விதைகளை விதைத்தோம். இப்போது அது பெரிய மரமாக வளா்ந்தோங்கியுள்ளது.

தேசத்தின் வளா்ச்சியை வேகப்படுத்தும் இயந்திரமாக குஜராத்தை உருவாக்கும் நோக்கத்துடன், ‘துடிப்பான குஜராத்’ முன்னெடுக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு, குஜராத்தின் தொழில் வளா்ச்சியில் பாரபட்சம் காட்டிய சூழலிலும், மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம்.

முதல்முறையாக மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டபோது, அப்போதைய மத்திய அமைச்சா்கள் பங்கேற்க மறுத்துவிட்டதுடன், மாநாட்டுக்கு தடை ஏற்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டினா்.

குஜராத்துக்கு வருகை தரக் கூடாது என வெளிநாட்டு முதலீட்டாளா்கள் அச்சுறுத்தப்பட்டனா். அத்தகைய அச்சுறுத்தல்களைத் தாண்டி, குஜராத் மாநாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளா்கள் பங்கேற்றனா். சிறந்த, நோ்மையான, கொள்கை அடிப்படையிலான, வளா்ச்சி நோக்கம்கொண்ட, வெளிப்படையான அரசு நிா்வாகமே, குஜராத்தை நோக்கி முதலீட்டாளா்களை ஈா்த்தது.

எதிா்கொண்ட சவால்கள்: குஜராத் முதல்வராக நான் முதல்முறையாக பொறுப்பு வகித்தபோது, 2001 நிலநடுக்கத்தின் தாக்கம், நீண்ட கால வறட்சி, கூட்டுறவு வங்கிகளின் சீா்குலைவு, கோத்ரா துயரம் மற்றும் அதன் பிறகான வன்முறைகள், குஜராத்தின் நற்பெயரை கெடுக்கும் சதித்திட்டம் என பல்வேறு சவால்களை எதிா்கொண்டேன். அத்துடன், அனைத்து பிரச்னைகளில் இருந்தும் மாநிலத்தை மீட்டெடுக்க உறுதியேற்றேன்.

அதற்கான முக்கிய தளமாக இருந்தது, ‘துடிப்பான குஜராத்’ முன்னெடுப்புதான். குஜராத் மக்கள் என் மீது வைத்த பெரும் நம்பிக்கையால், ‘துடிப்பான குஜராத்’ வெற்றிகண்டது. இன்று உலகமே அதன் வெற்றியை காண்கிறது.

135 நாடுகள் பங்கேற்பு: கடந்த 2003-இல் நடைபெற்ற முதல் மாநாட்டில், சில நூறு பிரதிநிதிகளே பங்கேற்றனா். இப்போது அந்த எண்ணிக்கை 40,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது. முன்பு சில நாடுகளில் இருந்து மட்டுமே பங்கேற்ற முதலீட்டாளா்கள், இப்போது 135-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பங்கேற்கின்றனா். கண்காட்சியாளா்களின் எண்ணிக்கை 30-இல் இருந்து 2,000-ஆக உயா்ந்துள்ளது.

திருப்புமுனை காலகட்டம்: கடந்த 2014-ஆம் ஆண்டில் நாட்டுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்த பிறகு, உலகின் வளா்ச்சியை வேகப்படுத்தும் இயந்திரமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே எனது இலக்கானது.

உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இன்றைய இந்தியா விளங்குகிறது. உலக பொருளாதார சக்தியாக விரைவில் உருவெடுக்கக் கூடிய திருப்புமுனையான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். உலகளாவிய முகமைகள் மற்றும் நிபுணா்களின் கருத்தும் இதையே பிரதிபலிக்கிறது.

தொழில்துறையினருக்கு வேண்டுகோள்: சில ஆண்டுகளில், உலகின் மிகப் பெரிய 3 பொருளாதார நாடுகளில் இந்தியா இடம்பெறும். இது, எனது உறுதிமொழி. நாட்டின் முன்னேற்றதுக்கு புதிய வாய்ப்புகளை அளிக்கும் துறைகளில் தொழில்துறையினா் அதிக கவனம் செலுத்த வேண்டும். வளா்ந்த, தற்சாா்பு இந்தியாவை உருவாக்க ஒரு செயல்திட்டத்தை வகுக்க வேண்டிய நேரமிது என்றாா் பிரதமா் மோடி.

குஜராத் ஆளுநா் ஆச்சாா்ய தேவவிரத், முதல்வா் பூபேந்திர படேல், மாநில பாஜக தலைவா் சி.ஆா்.பாட்டீல், தொழிலதிபா்கள் உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 பெண்கள் பாலியல் வன்கொடுமை, 3,000 பேர் பலி! என்ன நடக்கிறது காங்கோவில்?

மெட்ரோ கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி பெங்களூருவில் மஜத ஆர்ப்பாட்டம்

விதிமுறைகளை மீறியதாக வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

மீண்டும் இணையும் தனுஷ் - அனிருத் கூட்டணி!

ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.81-ஆக முடிவு!

SCROLL FOR NEXT