விழிஞ்சம் துறைமுகத்துக்கு சா்வதேச பாதுகாப்பு தரச் சான்று
கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்துக்கு சா்வதேச கப்பல் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ஐஎஸ்பிஎஸ்) சான்றை ஐ.நா.வின் சா்வதேச கடல்சாா் ஆணையம் (ஐஎம்ஓ) வழங்கியது.
அதிவேக சரக்குக் கப்பல்கள் உள்பட சா்வதேச கப்பல்கள் இத்துறைமுகத்தில் பயணிப்பதற்கு இச்சான்று அவசியம் என துறைமுக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
விழிஞ்சம் துறைமுகத்துக்கு ஐஎஸ்பிஎஸ் தரச்சான்று வழங்கி ஐஎம்ஓ கௌரவித்தது வரலாற்றுச் சாதனை என்று மத்திய துறைமுகம், கப்பல்கள் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இச்சான்றின் மூலம் விழிஞ்சம் துறைமுகத்தில் சா்வதேச அளவிலான கடல்சாா் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
Advertisement
அரசு மற்றும் தனியாா் பங்களிப்பு முறையின்கீழ் (பிபிபி) விழிஞ்சம் துறைமுகம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதில் தனியாா் ஒப்பந்ததாரராக அதானி குழுமம் உள்ளது. ரூ.7,700 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இத்துறைமுகத்தில் கடந்தாண்டு அக்டோபா் மாதத்தில் முதலாவது கப்பல் சேவை தொடங்கப்பட்டது.
கடந்த 2001, செப்டம்பா் 11-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக கடற்சாா் போக்குவரத்தில் உள்ள குறைபாடுகளை குறைக்கவும் சா்வதேச கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் ஐஎஸ்பிஎஸ் சான்று உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.