முகப்பு
இந்தியா

29 மணிநேரம் ராகிங்... மருத்துவ மாணவர் தற்கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!

பிப். 16 காலை 9 மணியிலிருந்து 17பிற்பகல் 2 மணிவரை மருத்துவ மாணவர் சித்தர்த்தனிடம் ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 7 ஏப்ரல், 2024 at 6:05 PM
பகிர்:

கேரளத்தில் சக மாணவர்கள் ராகிங் செய்ததால் மன உளைச்சலில் தவித்துவந்த கால்நடை மருத்துவ மாணவர் விடுதி கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட மாணவரிடம் 29 மணிநேரம் ராகிங் நடைபெற்றுள்ளதாக காவல் துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துவந்தவர் சித்தார்த்தன். 20 வயதான இவர், அக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.

Advertisement

இதனிடையே சக மாணவர்கள் மற்றும் மூத்த மாணவர்கள் சிலர் சித்தார்த்தனிடம் ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவர் சித்தார்த்தன், மாணவர் விடுதி கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது மரணம் தொடர்பாக 20 பேர் மீது, குற்றவியல் சதி மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் கேரள ரேகிங் தடைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சிபிஐ வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காவல் துறை அறிக்கை

சக மணவர்கள் மற்றும் மூத்த மாணவர்கள், பிப்ரவரி 16ம் தேதி காலை 9 மணியிலிருந்து 17ம் தேதி பிற்பகல் 2 மணிவரை மருத்துவ மாணவர் சித்தர்த்தனிடம் ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கைகளாலும், பெல்ட்டாலும் அவரை தக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தால் மன ரீதியிலும் உடல் ரீதியிலும் சித்தார்த்தன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். கல்லூரிப் படிப்பை விட்டு வீட்டிற்குச் செல்ல வேண்டும் என நினைத்த அவரால், வேறு வழியின்றி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். ஆண்கள் விடுதியிலுள்ள கழிவறையில் பிப்ரவரி 18ம் தேதி 12.30 முதல் 1.45 மணிக்குள் அவர் தூக்கிட்டுக்கொண்டுள்ளார்.

ஆரம்பகட்டத்தில் இயற்கைக்கு புறம்பான மரணம் என பதியப்பட்ட நிலையில், பின்னர் கல்லூரி ராகிங் தடுப்புக் குழுவினர் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையில், சித்தார்த்தன் உடலளவிலும் மனதளவிலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாக தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.