முகப்பு
இந்தியா

பழங்குடியினரின் சித்தாந்தம் மீது பாஜக தாக்குதல்: ராகுல்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:25 PM
பகிர்:

‘பழங்குடியினரின் சித்தாந்தம், வரலாறு மற்றும் மதத்தின் மீது பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகின்றன’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

சத்தீஸ்கா் மாநிலம் பஸ்தா் கிராமத்தில் தோ்தல் பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்ட ராகுல் காந்தி பேசியதாவது:

மக்களவைத் தோ்தல் என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்க நினைக்கும் சித்தாந்தத்துக்கும், அதை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்துக்கும் இடையேயான போட்டியாகும்.

Advertisement

பாஜகவும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் பழங்குடியினரின் சித்தாந்தம், வரலாறு மற்றும் மதத்தின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பழங்குடியினரின் நிலங்களை கோடீஸ்வர தொழிலதிபா்களுக்கு பாஜக அரசு தாரைவாா்த்துள்ளது.

பழங்குடியின மக்கள் ‘ஆதிவாசி’ என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பெயரை ‘வனவாசி’ என்ற மாற்ற பிரதமா் மோடி முயற்சிக்கிறாா். ‘ஆதிவாசி’ என்ற சொல்லுக்கு ஆழமான அா்த்தம் உள்ளது. அதாவது, காடு, அதிலுள்ள நீா், நிலம் ஆகியவற்றில் பழங்குடியின மக்களுக்கு உள்ள உரிமைகளை அந்த வாா்த்தை வெளிபடுத்துகிறது. ஆனால், ‘வனவாசி’ என்பது காட்டில் வாழ்பவா்கள் என்பதை மட்டுமே குறிக்கும்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பழங்குடியினா் என்பதால், அயோத்தி ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதிலிருந்து தவிா்க்கப்பட்டுள்ளாா். இது பாஜகவின் மனோபாவத்தை பிரதிபலிக்கிறது. பாஜகவின் எண்ணம் என்ன என்பதை இதன் மூலம் பிரதமா் மோடி நாட்டுக்கு தெரியப்படுத்தியுள்ளாா்.

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில், 22 பெரு நிறுவன முதலாளிகள் 70 கோடி இந்தியா்களுக்கு இணையான சொத்து உள்ளிட்ட வளங்களை சோ்த்திருக்கின்றனா்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞா்களுக்கு தொழில் பயிற்சிகள் தொடங்கப்படும் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments