கேஜரிவாலை பயங்கரவாதியை போல் நடத்துகிறார்கள்: பகவந்த் மான்
”ஜூன் 4-ஆம் தேதி ஆம் ஆத்மி மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாகும்.”
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை திகார் சிறையில் பயங்கரவாதியை போல் நடத்துகிறார்கள் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான், திகார் சிறையில் உள்ள அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து திங்கள்கிழமை பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுடன் பகவந்த் மான் பேசியது:
சிறையில் கடும் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள்கூட கேஜரிவாலுக்கு கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியை பிடித்தது போல் அவரை நடத்துகிறார்கள்.
பிரதமருக்கு என்ன வேண்டும்? வெளிப்படைத்தன்மை அரசியலை தொடங்கி பாஜகவின் அரசியலுக்கு முடிவு கட்டிய நேர்மையான அரவிந்த் கேஜரிவால் இப்படி நடத்தப்படுகிறார்.
எப்படி இருக்கிறீர்கள் என்று கேஜரிவாலிடம் கேட்டதற்கு, ”என்னை விடு, பஞ்சாப்பில் எல்லாம் நன்றாக உள்ளதா?” என்று கேட்டார். ஏனென்றால், நாங்கள் அரசியலை பணியாக செய்கிறோம். நாங்கள் கேஜரிவாலுடன் நிற்கிறோம்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜூன் 4-ஆம் தேதி, ஆம் ஆத்மி மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாகும்.” எனத் தெரிவித்தார்.