முகப்பு
இந்தியா

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

Updated On : 19 ஏப்ரல், 2024 at 8:42 AM
பகிர்:

கடக்: கர்நாடக மாநிலம் கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை அடையாளம் தெரியாத கும்பல் படுகொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் கடக்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை கடக் நகராட்சி துணைத் தலைவர் சுனந்தா பகாலேவின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடக் பெடகேரி முனிசிபல் கவுன்சில் துணைத் தலைவர் சுனந்தா பகாலே வீட்டில் இந்த கொடூரச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

கொலை செய்யப்பட்டவர்கள் கார்த்திக் பகாலே (27), பரசுராம் ஹதிமானி (55), லட்சுமி ஹதிமானி (45), அகன்ஷா ஹதிமானி (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுனந்தா பகாலேவின் மகன் கார்த்திக்கின் திருமணம் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற இருந்ததாகவும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அவர்களது இல்லத்தில் கூடியிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குற்றவாளிகள் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியின் மீது ஏறி முதல் மாடியில் நுழைந்து, அங்கு அறையில் உறங்கிக் கொண்டிருந்தவர்களைக் கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள். கொலைக் குற்றவாளிகள் தப்பி ஓடிய நிலையில், வீட்டின் உரிமையாளர் பிரகாஷ் பகாலே, உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மோப்ப நாய் உதவியோடு, தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து மாதிரிகளைச் சேகரித்தனர்.

சட்டம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீலும் பகாலேவின் வீட்டுக்குச் சென்று கொலைச் சம்பவம் குறித்து விசாரித்தார்.

இது குறித்து பிரகாஷ் பகாலே கூறுகையில், “என் மகன் கார்த்திக்குடன் 3 பேர் தரை தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். சப்தம் கேட்டதும் உடனடியாக அங்கே ஓடினோம், அப்போது குற்றவாளிகள் ஓடிவிட்டனர். கதவைத் திறந்திருந்தால் எங்களையும் கொன்றிருப்பார்கள் என்றார்.

கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →