ஐந்து மாத கால வறண்ட வானிலைக்குப் பிறகு பெங்களுருவில் வெள்ளிக்கிழமை மாலை மிதமான மழை பெய்துள்ளது.
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. நகரில் 80 சதவீத ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. இதனால் குடிப்பதற்கும், அன்றாட பயன்பாட்டுக்கும் தண்ணீர் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு பேப்பர் பிளேட், கப் போன்றவற்றை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நகரின் பல்வேறு இடங்களில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநேயாகம் செய்யப்பட்டு வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிகழாண்டில் மழை பொழியாததே தண்ணீர் தட்டுப்பாடுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் ஐந்து மாத கால வறண்ட வானிலைக்குப் பிறகு பெங்களுருவில் வெள்ளிக்கிழமை மாலை மிதமான மழை பெய்துள்ளது. ஐந்து மாத கால வறண்ட வானிலைக்குப் பிறகு பெங்களூருவில் மழை பெய்துள்ளதால் நகரவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே ஏப்ரல் 23 ஆம் தேதி வரை கர்நாடகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாநிலத்தின் சில பகுதிகளில் ஏப்ரல் 23 வரை தொடர்ந்து மழை பெய்யும். கர்நாடகத்தின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்பிறகு, அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலத்தில் படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் உயரும் என்று கணித்துள்ளது. அதேசமயம் பெங்களூருவில் (கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம்) குறிப்பிட்ட சில இடங்களில் ஏப்ரல் 20 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.