கே.சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது மகள் கே. கவிதா
கே.சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது மகள் கே. கவிதா 
இந்தியா

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

DIN

தெலங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நடைபெற்று வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 ஆண்டுகளில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி நிறுவனர் கேசிஆரின் குடும்பத்தினர் போட்டியிடாத முதல் மக்களவை தேர்தல் இதுவென தெரிவிக்கப்படுகிறது. தெலங்கானாவில் மே 13 வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தெலங்கானா ராஷ்ட்டிய சமிதி (தற்போது பிஆர்எஸ்) 2001-ல் தொடங்கப்பட்டது. 2004-ம் ஆண்டு முதல் அனைத்து மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தலில் கேசிஆர் குடும்பத்தினர் போட்டியிட்டு வந்துள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய கேசிஆர், கரீம்நகர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சரானார்.

தெலங்கானா மாநில பிரிவினை பிரச்னையின்போது காங்கிரஸுடனான மோதலால் 2006 மற்றும் 2008 இடைத்தேர்தல்களில் அதே தொகுதியில் எம்.பியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2009-ல் மகபூப்நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்த சமயம் தனி தெலங்கானா மாநில இலக்கை அவர் பெற்றிருந்த நேரம். கேசிஆர் மகன் கே.டி.ராமராவ் 2009 தேர்தலில் சிர்சிலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014-ல் கேசிஆர் மேடக் எம்பி தொகுதி மற்றும் காஜ்வெல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார். தெலங்கானா சட்ட மன்றத்தில் டிஆர்எஸ் பெரும்பான்மை பெறவே மேடக் மக்களவை உறுப்பினர் பதவி விலகி புதிய மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.

அதே தேர்தலில் கேசிஆரின் மகள் கவிதா நிசாமாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மகன் ராமா ராவ் மற்றும் மருமகன் ஹரீஷ் ராவ் முறையே சிர்சிலா மற்ரும் சித்திபேட் தொகுதிகளில் வெற்றி பெற்று கேபினர் அமைச்சர்களாகினர்.

2018-ல் கவிதா பாஜக தரம்புரி அரவிந்திடம் தோல்வியைத் தழுவினார். பின்னர் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேசிய அரசியலை முன்னெடுக்க 2022-ல் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி என்கிற பெயரை பாரதிய ராஷ்டிரிய சமிதி என பெயர் மாற்றம் செய்தார்.

10 ஆண்டுகள் மாநிலத்தை ஆட்சி செய்த பிஆர்எஸ் கட்சி, இந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸிடம் தோல்வியைத் தழுவியது.

சட்டமன்ற தேர்தலில் கேசிஆர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. 1985 முதல் போட்டியிட்டுவரும் கேசிஆர் சந்தித்த முதல் தோல்வி இது.

இந்த மக்களவை தேர்தலில் நிசாமாபாத்தில் கவிதாவை போட்டியிட திட்டமிட்டதாகவும் தில்லி மதுபான ஊழல் வழக்கில் அவர் கைதாகியதால் தற்போது அவரை களமிறக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேடக் அல்லது மலக்ஜ்கிரி தொகுதிகளில் கேசிஆர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும் மாநில அரசியலில் கவனம் செலுத்தும் முடிவில் கேசிஆர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT