குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!
குஜராத் கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் படகில் 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
குஜராத் கடற்பகுதியில் இரண்டாவது நாளாக 173 கிலோ எடையுள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவினருடன் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் இணைந்து குஜராத் கடற்பகுதிக்குள் சென்று கொண்டிருந்த மீன்பிடிப் படகில் திங்கள்கிழமை சோதனை செய்துள்ளனர்.
இந்த சோதனையின் போது படகில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவரை கைது செய்துள்ளனர்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அரபிக் கடலில் நடத்தப்பட்ட சோதனையில் பாகிஸ்தான் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ எடையுள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், படகில் பயணித்த பாகிஸ்தானை சேர்ந்த 14 பேரை கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்தனர்.