கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும்: சித்தராமையா
கேரள மாநிலத்துக்கு கர்நாடக அரசு துணை நிற்கும்..
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 30ல் கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் எண்ணிலடங்கா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோரின் உயிரை நிலச்சரிவு பலி வாங்கியுள்ளது. பலர் காயமடைந்து மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர்.
பேரிடர் பாதித்த வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், காணாமல் போன 300-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகின்றது.
Advertisement
மீட்புப் பணியில் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் ஒன்றிணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு கர்நாடக அரசு துணை நிற்கும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எங்களது ஆதரவை அளிப்போம் என்று உறுதியளித்தார்.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்கும் விதமாக கர்நாடக அரசு சார்பில் நூறு வீடுகள் கட்டித் தட்டித்தரப்படும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.