முகப்பு
இந்தியா

`மறக்கமுடியாத நினைவுகள்’ பதிவால் மறக்கமுடியாத நினைவானது! சர்ச்சையில் சிக்கிய சசி தரூர்!

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பதிவிட்ட நிவாரண உதவி வழங்கும் விடியோவால் சர்ச்சை

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 10:04 AM
சசி தரூர் (கோப்புப் படம்)
பகிர்:

கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பதிவிட்ட நிவாரண உதவி வழங்கும் விடியோ சர்ச்சைக்குள்ளானதற்கு பதிலளித்துள்ளார்.

கேரளத்தின் திருவனந்தபுரத்தின் காங்கிரஸ் எம்.பி.யான சசி தரூர் ஆக. 3, சனிக்கிழமை, கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்குவதற்காக வயநாட்டுக்கு சென்றிருந்தார். நிவாரணப் பொருள்களாக பாய், தலையணை மற்றும் போர்வை முதலானவற்றை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், வயநாட்டிற்கு சென்றது முதல் பாதிப்படைந்தவர்களைச் சந்தித்தது வரையில் விடியோ எடுத்து, தனது எக்ஸ் பக்கத்தில் `வயநாட்டில் மறக்கமுடியாத நாளின் சில நினைவுகள்’ என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தார் சசி தரூர்.

Advertisement

இதனையடுத்து, சசி தரூரின் எக்ஸ் பதிவுக்கு பலரும் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சசி தரூரின் பதிவைக் கண்டித்த எக்ஸ் தளப் பயனர் ஒருவர், ``உயிரிழப்புகளும் சோகங்களும் நிலவுகிற பகுதியில், மறக்கமுடியாத நினைவுகள் என்று குறிப்பிடுவது கண்டிக்கத்தக்கது’’ என்று தெரிவித்திருந்தார்.

மற்றொருவர், ``சோகத்தால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு ஒரு மறக்கமுடியாத நாளைக் கொண்டாடச் சென்றாரா?’’ என்று சசி தரூரின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேறொரு பயனர், ``உண்மையில் உதவுவதைவிட அதைப் பற்றி இடுகையிடுவதுதான் மிகவும் முக்கியமானது. தன்னலமற்ற சேவையை விட செல்ஃபிக்களுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது’’ என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தன்னுடைய எக்ஸ் பதிவு சர்ச்சையானதையடுத்து, சசி தரூர் ``மறக்கமுடியாதது என்பது நினைவில் கொள்ளத்தக்கது அல்லது நினைவில் கொள்ளக்கூடிய ஒன்று என்ற பொருளில்தான் சொன்னேன்" என்று பதிலளித்தார்.

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடா் கனமழையால் மேப்பாடி பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மண்ணில் புதையுண்டவா்களின் உடல்களை மோப்ப நாய்கள், மனிதா்களை மீட்கும் ரேடார், ஜிபிஎஸ் தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டா்கள் உதவியுடன் மீட்கும் பணிகள் தொடா்ந்து 6-வது நாளாக நடைபெற்று வருகின்றன.

நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது வரை 357ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.