FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வங்கதேச வன்முறை: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை.

5 ஆகஸ்ட் 2024, 11:04 pm IST
அமைச்சரவைக் குழுவுடன் ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி - ANI
பகிர்:

வங்கதேசத்தில் நிலவிவரும் வன்முறை சூழல் குறித்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக. 4) அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வங்கதேசத்தில் கல்வரம் நீடித்துவரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் டாக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல் உள்ளிட்டவை குறித்து மோடி விவாதித்ததாகத் தெரிகிறது.

வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், ஷேக் ஹசீனா போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, மீண்டும் போராட்டம் வெடித்தது.

பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள், டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டனர். முன்னாள் பிரதமரும் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்தனர். மேலும், உச்சநீதிமன்ற நீதிபதியின் இல்லத்தையும் முற்றுகையிட்டு சூறையாடினர்.

இதனிடையே வங்கதேச பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தலைநகர் டாக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஷேக் ஹசீனா வெளிநாட்டிற்குத் தப்பித்துச் சென்றார். அவர் அங்கிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்திலுள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்தார்.

அங்கிருந்து லண்டன் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. அப்போது டாக்கா நிலவரம் குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் ஷேக் ஹசீனா ஆலோசித்தார்.

லண்டன் செல்ல ஒப்புதல் கிடைத்ததும் அவர் இந்தியாவிலிருந்து புறப்படுவார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments