முகப்பு
இந்தியா

கேஜரிவாலின் ஜாமீன் மனு தள்ளுபடி!

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட், 2024 at 10:56 AM
கேஜரிவால் (கோப்புப்படம்) - DIN
பகிர்:

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீனுக்கு தில்லி உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து, திகார் சிறையில் இருந்த கேஜரிவாலை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது.

கடந்த ஜூலை 12-ஆம் தேதி அமலாக்கத் துறை வழக்கில், கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. எனினும் சிபிஐ வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தன்னை சிபிஐ கைது செய்ததற்கு எதிராகவும், இடைக்கால ஜாமீன் கோரியும் தில்லி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், கேஜரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேஜரிவால் கைதுக்கு நியாயமான காரணம் இல்லை என கூற முடியாது என்றும் ஜாமீனுக்கு அவர் விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறியுள்ளது.

இதையடுத்து, சிபிஐ கைதுக்கு எதிராக, தில்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.