ஃபிஜி: காந்தி சிலைக்கு குடியரசுத் தலைவர் முர்மு மலர் தூவி மரியாதை!
சுவாவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஃபிஜி நாட்டிக்கு வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பள்ளி ஒன்றில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஃபிஜி நாட்டுக்கு வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அந்நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா வரவேற்றார். பின்னர் அங்கு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை அவர் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து இன்று சுவாவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற திரௌபதி முர்முவுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை அதிபர் ரது வில்லியம் வரவேற்றார். இதையடுத்து, இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
Advertisement
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
சுவாவில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், உயர்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், அங்குள்ள மாணவர்களுடன் உரையாடினார்.
சுவாவில் மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளி குஜராத் கல்விச் சங்கத்தால் நிறுவப்பட்டதாகும். இந்த நிலையில் பள்ளி மாணவர்களுடன் குடியரசுத் தலைவர் முர்மு உரையாடினார் அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார்.
ஃபிஜி பயணத்தை நிறைவுசெய்த பின் நியூசிலாந்து மற்றும் டிமோா்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கு அவா் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவா் ஒருவா் ஃபிஜி மற்றும் டிமோா்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.