சோனியா காந்தியை சந்தித்த மனு பாக்கர்!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார் மனு பாக்கர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார் மனு பாக்கர்.
நட்சத்திர துப்பாக்கி சுடும் வீராங்கனையான மனு பாக்கர் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியை தில்லியில் புதன்கிழமை சந்தித்தார்.
அவர்கள் இருவரும் சந்தித்த படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. தகவலின்படி, அவர்களின் சந்திப்பு சிறிது நேரம் நீடித்தது. அதன் பிறகு மனு பாக்கர் அங்கிருந்து கிளம்பினார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்த மனு பாக்கர், புதன்கிழமை காலை தில்லி வந்தார். அவருக்கு அங்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினருடன் நூற்றுக்கணக்கான மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர்.
மனு பாக்கரின் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவும் அவருடன் சென்றார். அவரை வரவேற்ற ரசிகர்களுக்கு மனு பாக்கர் தான் வென்ற பதக்கங்களைக் காட்டினார்.
விமான நிலையத்திலிருந்து வெளியேறிய பிறகு அவருக்கு பலரும் பூங்கொத்துகள், மாலைகள் அணிவித்து கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.