எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இன்றைய அவை நடவடிக்கையின்போது, எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் குற்றம்சாட்டி அவை வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு போதிய மரியாதையை அளிக்கப்படவில்லை, ஆளும் கட்சியினர் அவரை தவறான முறையில் பேசுகின்றனர். எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை, அவர்கள் பேச முற்படும்போது மைக் அணைக்கப்படுகிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
தொடர்ந்து பிற்பகலில் சமாஜவாதி எம்.பி. ஜெயா பச்சனுக்கும் அவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கும் கருத்து மோதல் நடைபெற்றுள்ளது.
பெண் எம்.பி.க்களுக்கு மரியாதை வழங்கப்படவில்லை. இதற்கு அவைத் தலைவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.
நேற்றும் வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்க மறுத்ததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து மோதலில், அவையில் தனக்கு போதிய ஆதரவு இல்லை என்று கூறி அவைத் தலைவர் ஜகதீப் தன்கரும் சிறிது நேரம் அவையில் இருந்து வெளியேறினார்.
தொடர்ந்து இன்றும் அவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் தொடர் மோதல் நடைபெற்ற நிலையில், வருகிற திங்கள்கிழமை வரை நடைபெறவிருந்த மாநிலங்களவை நடவடிக்கைகள் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.