பிகாரில் சிறுமி உள்பட ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை
பிகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.
பாட்னா: பிகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வெள்ளிக்கிழமை இரவு சிரஞ்சீவிபூர் கிராமத்தில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொலையாளிகள், நள்ளிரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் நுழைந்து, 10 வயது பெண் உள்பட மூன்று பேரை கொன்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மூவரும் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
இன்று காலை காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து சென்று உடல்களை மீட்டு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது காவல்துறை.
பலியானவர்களின் தலையில் காயங்கள் இருந்துள்ளன. எனினும், உடல் கூறாய்வுக்குப் பிறகே மரணம் நேரிட்டது குறித்து தெரிய வரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கொலையானவர்கள் சஞ்சீவன் மஹ்தோ (40), அவரது மனைவி சஞ்ஜீதா தேவி (36), மகள் சப்னா குமாரி (10) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களது ஆறு வயது மகன் அங்குஷ் குமார், படுகாயங்களுடன் உயிர்தப்பியிருக்கிறார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், பலியான சஞ்சீவன் மஹ்தோ இரண்டு திருமணம் செய்தவர் என்பதும், இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. முதல் மனைவிக்கு எந்த உதவியும் செய்யாததால், இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, முதல் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுவன்தான் முக்கிய சாட்சியமாக இருப்பார் என்பதால், அவரிடம் வாக்குமூலம் பெற காவல்துறையினர் தயாராக உள்ளனர்.
அனைத்துக் கோணங்களிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதகாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கொலையானவர்களின் உடல்கள் மீது ஆசிட் தெளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தாலும், அதனை காவல்துறை உறுதி செய்யவில்லை.