முகப்பு
இந்தியா

ஓடும் ரயிலில் திடீர் புகை: அச்சத்தில் வெளியே குதித்த பயணிகள் காயம்!

இது விபத்தா? அல்லது சதிச்செயலா என்ற கோணத்தில் ரயில்வே காவல் துறையினர் விசாரணை

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 2:41 PM
கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேசம்: ஓடும் ரயிலில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பானில் இருந்து புகை வெளியேறியதால், அச்சமடைந்த பயணிகள் வெளியே குதித்தனர்.

இதில் 4 பயணிகள் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே காவல் துறை தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூருக்கு் அம்ரிஸ்தர் மெயில் ரயில் இன்று காலை புறப்பட்டது.

ஷாஜகான்பூர் நோக்கிச் சென்ற ரயில், மிரான்பூர் கத்ரா - ஃபதேகஞ்ச் நகர்களுக்கு இடைப்பட்ட பாலத்தைக் கடக்கும்போது, பொதுப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பானிலிருந்து புகை வெளியேறியது.

இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். சிலர் ரயிலில் இருந்த சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த முயன்றனர். அதற்குள் சில பயணிகள் அச்சத்தின் மிகுதியால் ரயிலில் இருந்து குதித்தனர்.

இதில், 4 பயணிகள் படுகாயமடைந்ததாக ரயில்வே காவல் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் ஷாஜகான்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படையினர் அளித்த தகவலின்படி, ரயிலில் இருந்த தீயணைப்பானின் தலைப்பகுதியில் உள்ள பொத்தான் அழுத்தமாக பொருந்தாமல் இருந்ததே புகை வெளியேறக் காரணம் எனத் தெரிகிறது.

எனினும் இது விபத்தா? அல்லது சதிச்செயலா என்ற கோணத்தில் ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தின் அன்பாரா பகுதியிலிருந்து ஒடிசா - சத்தீஸ்கர் எல்லையிலுள்ள காரியார் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த ரயில் இன்று (ஆக. 11) தடம் புரண்டு விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →