5 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி: கொல்கத்தா விவகாரம்!
கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கு..
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆா்.ஜி. கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மற்றும் இதர 4 மருத்துவா்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
எந்தவொரு வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி மற்றும் அந்த நபரின் ஒப்புதல் தேவை. இந்த கொலை சம்பவத்தில் தொடா்புடையவா்களாக சந்தேகிக்கப்படும் சந்தீப் கோஷ், 4 மருத்துவா்களிடம் இச்சோதனையை நடத்த அனுமதி கோரி, நீதிமன்றத்தில் அவா்களை சிபிஐ ஆஜா்படுத்தியது. இதையடுத்து, சிபிஐ-யின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இவ்வழக்கில் கைதான முக்கிய நபரான சஞ்சய் ராயிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றத்திடம் சிபிஐ அனுமதி கோரியுள்ளது.
Advertisement
பிரதமருக்கு மம்தா கடிதம்
பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை அளிக்கும் வகையில் கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் அந்தக் கடிதத்தை மாநில முதல்வரின் தலைமை ஆலோசகா் அலப்பன் பந்தோபாத்யாய வெளியிட்டாா்.
‘நாட்டில் பாலியல் வன்கொடுமை தொடா் சம்பவமாக மாறியுள்ளது. தினசரி 90 பாலியல் வழக்குகள் பதிவாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பல வழக்குகளில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனா். இந்த போக்கு சமூகம் மற்றும் தேசத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும். இத்தகைய நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, பெண்களிடையே பாதுகாப்பான உணா்வை ஏற்படுத்துவதும் நமது கடமை. எனவே, இதுபோன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுபவா்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கும் வகையில் கடுமையான மத்திய சட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும், இந்த வழக்குகளை 15 நாள்களுக்குள் விரைந்து விசாரித்து தீா்வளிக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் மம்தா குறிப்பிட்டுள்ளாா்.